search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்திருக்க 6 லட்சம் பிரிட்டன் மக்கள் கையெழுத்து இயக்கம்
    X

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்திருக்க 6 லட்சம் பிரிட்டன் மக்கள் கையெழுத்து இயக்கம்

    பிரிட்டன் பிரதமர் தெரசா மே முன்வைத்த பிரெக்சிட் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் போன நிலையில் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து இணைந்திருக்க 6 லட்சம் மக்கள் கையொப்பமிட்டுள்ளனர். #Brexit #Bremain #UKgovernment #EuropeanUnion
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வரும் 29-ந் தேதி முடிவடைகிறது. 
     
    ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்சிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

    அதேபோல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள்.

    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்சிட்’ நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது. எனவே எம்.பி.க்களை சமாதானம் செய்யும் வகையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை தெரசா மே கொண்டுவந்தார்.

    அதனை தொடர்ந்து, கடந்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தையும் எம்.பி.க்கள் நிராகரித்து விட்டனர்.

    அதேசமயம், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மீது மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

    நாடாளுமன்றத்தில் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    இந்த நிலையில், பிரிட்டன் நாட்டு சட்டத்தின்படி ஒரு விவகாரம் தொடர்பாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள் கையொப்பமிட்டால் அதை பாராளுமன்றம் பரிசீலனை செய்யலாம் என்ற நிலை உள்ளது.

    இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ என்பவர் பிரிட்டன் அரசு மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் மூலமாக கையெழுத்து வேட்டை நடத்தினார்.

    'ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது மக்களின் முடிவு என்று பிரிட்டன் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதை தடுத்து நிறுத்த ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை பெருவாரியான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை இந்த அரசுக்கு நாம் நிரூபித்தாக வேண்டும். 

    எனவே, அனைவரும் தவறாமல் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும்’ என பிரிட்டன் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் 50-வது பிரிவை பயன்படுத்தி ‘பிரெக்சிட்’ வாக்கெடுப்பை தவிடுப்பொடியாக்கும் வகையில் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ குறிப்பிட்டிருந்தார். 

    இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று பெருவாரியாக வாக்களித்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் நேற்றிரவு திடீரென்று முடங்கியது.

    இன்றைய நிலவரப்படி 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்  ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாக்களித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக விரைவில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Brexit #Bremain #UKgovernment #EuropeanUnion
    Next Story
    ×