search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்து குகை மீட்பு பணியில் நீர்மூழ்கி வீரர் உயிரிழப்பு- அதிகாரிகள் அதிர்ச்சி
    X

    தாய்லாந்து குகை மீட்பு பணியில் நீர்மூழ்கி வீரர் உயிரிழப்பு- அதிகாரிகள் அதிர்ச்சி

    தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ThaiCaveRescue #NavyDiverDies
    பாங்காக்:

    தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    ஆனால், குகைக்குள் தேங்கிய தண்ணீரைக் கடந்து அவர்களை அழைத்து வர முடியாத நிலை உள்ளது. எனவே, முதலில் நீர்மூழ்கி வீரர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் நன்கு பயிற்சி பெற்ற நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று அவர்களை அழைத்து வரும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

    தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம்  மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்டு அழைத்து வர வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். 

    இந்த நிலையில், சிறுவர்கள் இருந்த குகைக்குள் சென்று திரும்பிய தாய்லாந்து முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். 

    தாய்லாந்து கடற்படையின் நீர்மூழ்கி வீரராக பணியாற்றிய சமன் குணன், சிறுவர்களை மீட்கும் பணிக்கு உதவி செய்வதற்காக தானாக முன்வந்து கடற்படையுடன் இணைந்துள்ளார். குகைக்குள் சென்று சிறுவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒப்படைத்த குணன், அங்கிருந்து இன்று அதிகாலை நீருக்குள் மூழ்கி நீந்தியபடி குகையின் மற்றொரு பகுதியில் உள்ள முகாமிற்கு திரும்பினார். ஆனால், வழியிலேயே அவரது ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் குறையத் தொடங்கியது. இதனால் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி இறந்துள்ளார் குணன். 

    நீர்மூழ்கி வீரரின் மரணம் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஆபத்து நிறைந்த இந்த மீட்புப் பணியில் முதல் உயிரிழப்பு இதுவாகும். 

    சிறுவர்களை மீட்பதற்காக உயிர்த்தியாகம் செய்த வீரர் குணனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சத்தாஹிப் கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.  #ThaiCaveRescue #NavyDiverDies
    Next Story
    ×