search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் 18 மாதத்துக்கு முன்பு கடலில் மூழ்கி மாயமான பெண் உயிருடன் மீட்பு
    X

    இந்தோனேசியாவில் 18 மாதத்துக்கு முன்பு கடலில் மூழ்கி மாயமான பெண் உயிருடன் மீட்பு

    இந்தோனேசியாவில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாட்டில் சுகாபூமி தீவை சேர்ந்த பெண் சுனாரிஷ் (வயது 53). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்டேபஸ் கடற்கரையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது அவரை ராட்சத அலை இழுத்து சென்றுவிட்டது. அவரை தேடும் பணி நடந்தது. பல நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. கடைசி வரை உடலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அவருடைய தந்தை கனவில் தோன்றிய சுனாரிஷ் நான் உயிரோடு தான் இருக்கிறேன். கடலில் மூழ்கிய பகுதி அருகே தான் உள்ளேன். என்னை மீட்டு செல்லுங்கள் என்று கூறினார்.

    இதை அவரது தந்தை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தொடர்ந்து அவருக்கு இவ்வாறு கனவு வந்தது. இதனால் தந்தையும், சுனாரிசின் சகோதரியும் அந்த பகுதிக்கு தேடி சென்றனர்.

    நீண்ட நேரம் தேடிய நிலையில் அவர் கடலில் மூழ்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் உயிர் பிழைத்து கொண்டார். ஆனால், பேசும் நிலையில் இல்லை. சில நாட்களில் பேச்சு வந்துவிடும் என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்.

    18 மாதங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியவர் எப்படி உயிரோடு வந்தார்? என்பது மர்மமாக இருக்கிறது. அவரிடம் ஏதோ விசித்திர சக்தி இருக்கிறது. அதனால் தான் அவர் உயிருடன் வந்து விட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

    ஆனால், சிலர் சுனாரிசின் குடும்பத்தினர் நாடகம் ஆடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

    இந்தோனேசியாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×