என் மலர்
செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மேயர் சுட்டுக் கொலை
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்ற மேயர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். #Philippinemayordead
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந்நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும், தேடி கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசார் மற்றும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் போலீசாரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மின்டானாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த டட்டு சவுதி அம்பட்டுவான் நகர மேயர் சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட சுமார் 4,200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பட்டாங்காஸ் மாகாணத்தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தூரத்தில் இருந்து பாய்ந்துவந்த ஒரு தோட்டா, மேயரின் மார்பை துளைத்து சென்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, போலீசாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை தெரு வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி என்பது குறிப்பிடத்தக்கது. #Philippinemayordead #tamilnews
Next Story






