search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் தேர்தலில் போட்டியிட முஷாரப்புக்கு நீதிமன்றம் தடை
    X

    வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் தேர்தலில் போட்டியிட முஷாரப்புக்கு நீதிமன்றம் தடை

    பல்வேறு வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தேசத்துரோகம் உள்பட பல வழக்குகள் நடந்து வருகிறது. தற்போது அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியதால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷாரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 

    பின்னர், அந்நாட்டு தேசிய தகவல் பதிவு மையத்தின் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில், முஷாரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கத்தை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்தது. முஷாரப் நாடு திரும்ப வேண்டும், வழக்கை சந்திக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.

    இதற்கிடையில், அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் சித்ரால் தொகுதியில் போட்டியிட முஷரப் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்யவும், வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளவும் வழிசெய்யும் விதத்தில் அவரது பாஸ்போர்ட் முடக்கம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

    இதற்கு முன்னதாக லாகூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் விசாரணையில் நேற்று முன்தினம் முஷாரப் ஆஜராக இறுதி கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால்,அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.

    இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றம் தன்னை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முஷரப் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது அன்றைய தினம் விசாரணை நடந்தது.

    அதில், நேற்று முஷாரப் ஆஜராக வேண்டும். அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. எனினும், அவர் ஆஜராகாத நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முஷாரப்புக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    Next Story
    ×