search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொறுப்பற்ற ஆக்கிரமிப்புக்கு உரிய பதிலடி தரப்படும் - அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
    X

    பொறுப்பற்ற ஆக்கிரமிப்புக்கு உரிய பதிலடி தரப்படும் - அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

    கொரிய தீபகற்பத்துக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறுப்பற்ற ஆக்கிரமிப்புக்கு உரிய பதிலடி தரப்படும் என அந்த நாடு கூறி உள்ளது.
    சியோல்:

    கொரிய தீபகற்பத்துக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொறுப்பற்ற ஆக்கிரமிப்புக்கு உரிய பதிலடி தரப்படும் என அந்த நாடு கூறி உள்ளது.

    வடகொரியாவின் தொடர் அணுகுண்டு சோதனைகளும், ஏவுகணை சோதனைகளும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கடும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

    ஐ.நா. சட்ட திட்டங்களை மதிக்காமல், உலக நாடுகளின் கண்டனத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அணு ஆயுதங்களை சோதித்து வருகிற வடகொரியாவுக்கு சரியான பதிலடி தர வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் ஆகும்.

    சிரியாவில் விஷ வாயு தாக்குதல் நடத்திய பஷார் அல் ஆசாத் அரசுக்கு சரியான பாடம் கற்றுத்தரும் வகையில், எந்த ஷராத் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்று சிரியா விமானங்கள் விஷ வாயு தாக்குதலை நடத்தினவோ, அதே விமான தளத்தின் மீது அமெரிக்கா 59 டொமாஹாக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    உயிர்ச் சேதங்களுக்கு மத்தியில் அந்த விமான தளம் உருக்குலைந்து போய்விட்டது.

    இப்போது சிரியா பாணியில் வடகொரியா மீதும் ராணுவ நடவடிக்கை எடுப்பதுதான் வழி என்று அமெரிக்கா முடிவுக்கு வந்துள்ளது.

    அதுவும் கடந்த 6-ந் தேதி வடகொரியா மீண்டும் நடுத்தர ரக ஏவுகணை ஒன்றை கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள சின்போ நகரில் ஏவி சோதித்தது, அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எனவே கொரிய தீபகற்பத்தை நோக்கி கார்ல் வின்சன் என்று அழைக்கப்படுகிற அமெரிக்க கடற்படை தொகுதியை அனுப்பி வைக்க டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த கடற்படை தொகுதியில், நிமிட்ஜ் ரகத்தை சேர்ந்த யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பலும், ஏவுகணை வழிநடத்தும் யுஎஸ்எஸ் வேனே இ மேயர், யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி என்னும் 2 நாசகார கப்பல்களும் அடங்கி உள்ளன. அதுமட்டுமின்றி யுஎஸ்எஸ் லேக் சேம்பிளயின் என்ற அதிவேக போர்க்கப்பலும் இடம் பெற்றிருக்கிறது.

    இவையெல்லாம் கொரிய தீபகற்ப பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன.

    அவற்றில் 5 ஆயிரம் கடற்படை வீரர்களும் உள்ளனர்.

    எனவே எந்த நேரத்திலும் வடகொரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க கடற்படை தயாராக நிறுத்தப்படும்.

    அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை, வடகொரியாவுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுப்பதற்கு அந்த நாடும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வடகொரியா அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை அப்பட்டமாக அமெரிக்காவை மிரட்டுகிற வகையில் அமைந்துள்ளது.

    அதில் கூறி இருப்பதாவது:-

    அமெரிக்காவின் பொறுப்பற்ற ஆக்கிரமிப்பு செயலுக்கு அந்த நாடு விரும்புகிற விதத்தில் நாங்கள் பதிலடி கொடுப்போம்.

    தற்போதைய கடுமையான நிலையை கருத்தில் கொண்டு, வடகொரியா தனது சுய தற்காப்புக்காக அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறனுடன் உள்ளது. அது ஏற்படுத்துகிற பேரழிவுகளுக்கு அமெரிக்காவை நாங்கள் பொறுப்பேற்க வைப்போம்.

    இவ்வாறு வடகொரியா அதில் கூறி உள்ளது.

    வடகொரியா மேலும் பேலிஸ்டிக் ரக ஏவுகணைகளை கிழக்கு கடல் பகுதிக்கோ அல்லது ஜப்பான் கடலுக்கோ சென்றடைகிற விதத்தில் ஏவினால் அவற்றை அமெரிக்க போர்க்கப்பல்கள் தடுத்து நிறுத்த முடியும் என்று ராண்ட் கார்ப் என்ற அமைப்பை சேர்ந்த வல்லுனர் புருஸ் பென்னட் கூறி உள்ளார். 
    Next Story
    ×