என் மலர்
செய்திகள்

பிரான்சில் பள்ளியில் புகுந்து மாணவன் துப்பாக்கி சூடு: 4 பேர் காயம்
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டில் கிராஸ்சி நகரில் தோக்குவில்லே உயர்நிலைப் பள்ளி உள்ளது. நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர்.
அப்போது வகுப்பறையில் திடீரென ஒரு மாணவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே உயிர் தப்பிக்க மாணவர்கள் அங்குமிங்கும் ஓடினர். சிலர் முண்டியடித்த படி வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்கள் தவிர 10 மாணவர்கள் லேசான காயம் அடைந்துள்ளனர். தப்பி ஓட முயன்ற போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் இவர்களுக்கு காயம் ஏற்பட்டது. சிலர் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்திய 17 வயது மாணவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து ஒரு ரைபிள் துப்பாக்கி, 2 கைத்துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இத்தாக்குதலில் தீவிரவாதிகள் தொடர்பு இல்லை. சக மாணவர்களுடன் இருந்த முன் விரோதம் காரணமாகவே இத்தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.