search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமாலியாவில் கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்ற எண்ணெய் கப்பல் விடுவிப்பு
    X

    சோமாலியாவில் கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்ற எண்ணெய் கப்பல் விடுவிப்பு

    சோமாலியா நாட்டில் கடல் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட எண்ணெய் கப்பலை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டில் அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் பாதுகாப்பு குறைவாக உள்ள அந்நாட்டு கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்களை சிறைபிடிக்கும் கடல் கொள்ளையர்கள், அதிலுள்ள நபர்களையும், பொருட்களையும் சிறைபிடித்து, பிறகு பெரிய அளவிலான பிணைத்தொகையை பெற்ற பின்னர் விடுவித்து வருகின்றனர்.

    இதில், கப்பலுக்கு சொந்தமான நாடு அல்லது நிறுவனம் ஒரு தொகையையும், அதில் உள்ள சரக்குகளை பெற்றுக் கொள்ளும் தரப்பினர் ஒரு தொகையும் தருவதால் ஒரு கப்பலை கடத்தினால் போதும் கோடிக்கணக்கான பணத்தை கறந்து விடலாம் என இந்த தீவிரவாதிகள் நம்புகின்றனர்.

    இதன் மூலம் கிடைக்கும் பணத்தை அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கைக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலை சோமாலியா கடல் பகுதியில் கொள்ளையர்கள் சிறைபிடித்து, கடத்திச் சென்றதாக கடல் கொள்ளைக்கு எதிரான கண்காணிப்பு முகமை இம்மாதம் 13-ம் தேதி தெரிவித்தது.

    அந்த கப்பலை கொள்ளையர்கள் எந்த இடத்துக்கு கடத்திச் சென்றனர் என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையை சேர்ந்த 8 பேர் இருப்பதாக நம்பப்படுகிறது.



    1800 டன் எடை கொண்ட இந்த ஏரிஸ் ரக சரக்கு கப்பல் பனாமா நாட்டில் தயாரிக்கப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒரு கடல் போக்குவரத்து நிறுவனத்தால் தற்போது இயக்கப்படுகிறது.

    சோமாலியா நாட்டில் தன்னாட்சி உரிமை பெற்ற புன்ட்லேன்ட் பகுதியில் உள்ள அலுலா துறைமுகம் அருகே இந்த கப்பலை கொள்ளையர்கள் வழிமறித்து கடத்தி இருப்பதால் அந்த எண்ணெய் கப்பலை மீட்பதற்காக நேற்று முன்தினம் அந்நாட்டின் கடற்படை மற்றும் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கடத்தப்பட்ட கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்த கடற்படையினர் அங்கிருந்த கொள்ளையர்களுடன் நேற்று கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே அந்த கப்பலில் சென்ற பெட்ரோலிய கச்சா எண்ணெய் சோமாலியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்தது.

    இதையடுத்து, அந்த கப்பலை மீட்பதற்காக ஒருபுறம் கொள்ளைர்களிடம் சமரச பேச்சுவார்த்த நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவார்த்தையின் பலனாக அந்த கப்பலை கொள்ளையர்கள் விடுவித்ததாகவும், இதற்காக அவர்கள் பணம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் மொகடிஷு நகரில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலில் இருந்த எட்டு பேரும் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    வழக்கமாக சிறியரக கப்பல்களை மட்டும் கடத்தும் சோமாலியா கடல் கொள்ளையர்கள் கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு இதேபோன்றதொரு பெரிய சரக்கு கப்பலை கடத்திச் சென்று, பெரிய அளவிலான தொகையை பெற்றுகொண்டு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஈரான் நாட்டை சேர்ந்த 8 பேர் இன்னும் இவர்களின் பிடியில் பிணைக் கைதிகளாக இருந்து வருகின்றனர்.
    Next Story
    ×