search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு: ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ஒபாமா அறிவிப்பு
    X

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு: ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் - ஒபாமா அறிவிப்பு

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒபாமா அறிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாக கூறப்படும் ரஷியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒபாமா அறிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் சபை வாக்குகளை அதிகமாக பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் வாக்குகளை அதிகளவில் பெற்றாலும் தேர்தல் சபை வாக்குகளை குறைவாக பெற்றதால் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை வெற்றி பெறச்செய்ததில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக, ‘ரஷிய அரசுடன் தொடர்புடைய தனி நபர்கள், ஹிலாரியின் ஜனநாயக கட்சி தேசிய குழு மற்றும் ஹிலாரி பிரசார குழு தலைவர் பிரசாரம் தொடர்பான ஆயிரக்கணக்கான இ-மெயில்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருடி, விக்கி லீக்ஸ் இணையதளத்தின் மூலம் கசிய விட்டனர். ஹிலாரி தோற்பதற்காகவும், டிரம்ப் வெற்றி பெறுவதற்காகவும் இதை செய்துள்ளனர்’ என குற்றம் சாட்டியது.

    நேற்று முன்தினம் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பேட்டி அளித்தபோது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் (திருட்டில்) ரஷிய அதிபர் புதினுக்கு தொடர்பு உண்டு என குற்றம் சாட்டினார்.

    இது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, என்.பி.ஆர். என்னும் தேசியபொது வானொலிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    (ரஷியா உள்ளிட்ட) எந்தவொரு வெளிநாட்டு அரசும், நமது தேர்தல்களில் நேர்மைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறபோது, அதில் நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நாம் நடவடிக்கை எடுப்போம். உரிய நேரத்தில், சரியான இடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் சந்தேகத்துக்கு இடம் இல்லை என்று கருதுகிறேன்.

    (இ-மெயில்களில்) சில வெளியாகி இருக்கலாம். சில வெளியாகாமல் இருக்கலாம்.

    இதுதொடர்பாக எனது உணர்வுகளை புதின் நன்றாக அறிந்திருப்பார். ஏனென்றால் இதுபற்றி நான் அவரிடம் நேரடியாக பேசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரி 20-ந்தேதி முடிகிற நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா மீது ஒபாமா என்னவிதமான நடவடிக்கையை மேற்கொள்வார் என தெரியவில்லை.

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது தனது உளவு அமைப்புகள், இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து இ-மெயில்கள் திருடியது, புதினின் மேற்பார்வையில்தான் நடந்தது என அமெரிக்க அதிகாரிகள் 3 பேர் நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உதவியாளர் யூரி உஷாகோவ் பதில் அளித்துள்ளார்.

    டோக்கியோவில் நிருபர்களிடம் இந்த விவகாரம் குறித்து நேற்று அவர் பேசும்போது, “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையிட்டது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டைப்பொறுத்தமட்டில், ஒபாமாவிடம் அதிபர் புதின் தெளிவான பதிலை ஏற்கனவே கூறிவிட்டார். ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை ஒபாமாவிடம் புதின் தெரிவித்து விட்டார்” என்று கூறினார். 
    Next Story
    ×