search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்ற 45-வது ஆண்டு தினம்: வங்காளதேசத்தில் கோலாகல கொண்டாட்டம்
    X

    பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்ற 45-வது ஆண்டு தினம்: வங்காளதேசத்தில் கோலாகல கொண்டாட்டம்

    இந்திய ராணுவத்தின் உதவியுடன் பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து, வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமான சுதந்திர தினத்தை வங்காளதேச மக்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
    டாக்கா:

    பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து 1947-ம் ஆண்டு விடுதலை அடைந்த பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் பகுதிக்குக் குறைந்த அளவு நிதியுதவி கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்று அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கொதிப்படைந்தனர்.

    பாகிஸ்தான் அரசு வங்காள மொழியை ஆட்சி மொழியாக உறுதி செய்யவில்லை என்பதாலும் காரணமாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்தனர். மேலும் பல்வேறு அடக்குமுறைகளை முன்வைத்து, கிழக்கு பாகிஸ்தானில் தனிநாடு கோரும் விடுதலை போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் முக்தி பாஹினி என்று அழைக்கப்பட்ட எதிர்ப்பு இராணுவம் உருவாக்கப்பட்டது.

    26-3-1971 அன்று இந்த விடுதலைப் போராட்டத்தை நிறுத்தும் பொருட்டு பாகிஸ்தான் இராணுவம் வங்காள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை அறிவிப்பை வெளியிட்டது. அன்றுமுதல் கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

    அந்த ஆண்டின் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பல்வேறு வங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுக்கு இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி படை தாக்குதல் நடத்தியது.

    இப்போர் நடைபெறும்பொழுது இந்திய இராணுவமும் சோவியத் ஒன்றியமும் முக்தி பாகினிக்கு நிதியுதவி செய்திருந்தது. சுமார் 9 மாதங்கள் நீடித்த இந்தப் போரில் சுமார் 30 லட்சம் மக்கள் பலியாகினர்.

    இதே நேரத்தில் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்தது. இதனால், 1971-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது.

    அந்நாள் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினி படையும் வெற்றி பெற்றன. 16-12-1971 அன்று பாகிஸ்தான் ராணுவ தளபதி நியாசி தலைமையில் அந்நாட்டின் படைவீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். அன்றைய தினம் பாகிஸ்தானிடம் இருந்து விடுபட்டதை வங்காளதேச மக்கள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர். 



    நாடு விடுதலை அடைந்த 45-வது ஆண்டு தினத்தை வங்காளதேச மக்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்தனர். டாக்கா புறநகரான சவார் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் அப்துல் ஹமித், பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோர் விடுதலை போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக, நேற்றிரவு பிரதமரின் மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் வங்காளதேசத்தின் விடுதலைக்காக போரில் ஈடுபட்ட இந்தியா மற்றும் ரஷியாவை சேர்ந்த 29 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×