search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹிலாரியின் பாதுகாவலர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும்: டிரம்ப் கொலைவெறி பேச்சு
    X

    ஹிலாரியின் பாதுகாவலர்களிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும்: டிரம்ப் கொலைவெறி பேச்சு

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டும் ஹிலாரி கிளிண்டனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும் என அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டும் ஹிலாரி கிளிண்டனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க வேண்டும் என அவரை எதிர்த்து போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் ஊடக குழுமங்களின் அதிபரும் பெரும் செல்வந்தருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

    நான் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் நாட்டில் நிலவிவரும் துப்பாக்கிகள் தொடர்பான தாராளமய கொள்கையை மறுபரிசீலனை செய்து சட்டதிருத்தம் ஏற்படுத்த ஆலோசிப்பேன் என சமீபத்தில் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில், மியாமி நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், ‘ஹிலாரி கூறியுள்ள கருத்தை வைத்துப் பார்க்கையில், அவருக்கு பாதுகாப்பு அளித்துவரும் ரகசிய போலீசாரிடம் இருக்கும் துப்பாக்கிகளை அவர்கள் கைவிட வேண்டும், அவர்கள் உடனடியாக இந்த முடிவை எடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

    அவர்களிடம் இருக்கும் துப்பாக்கிகளை பறித்து விடுங்கள். அப்போது ஹிலாரியின் கதி என்னவாகிறது? என்பதைப் பாருங்கள். அதன் விளைவு மிகவும் ஆபத்தானதாக இருக்கும்’ என்று கூறினார்.

    அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி, டிரம்ப் இருவருக்கும் அமெரிக்க ரகசிய போலீஸ் படையினரின் மிகவும் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் டொனால்ட் டிரம்பின் இந்த கருத்து ஹிலாரி மீது மீண்டும் வன்முறையை ஏவிவிடும் வகையில் அமைந்துள்ளதாக அவரது தேர்தல் பிரசாரத்தை கவனித்துவரும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×