என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காதல் விவகாரம்: வாலிபர் ஓடஓட வெட்டிக்கொலை -  சிறுமியின் தந்தை, தம்பி உள்பட 4 பேர் கைது
    X

    காதல் விவகாரம்: வாலிபர் ஓடஓட வெட்டிக்கொலை - சிறுமியின் தந்தை, தம்பி உள்பட 4 பேர் கைது

    • மணிகண்டன் நேற்று வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரை நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
    • கொலை குறித்து போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன்.

    இவருக்கும் திருச்செந்தூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் அவரது மகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் மணிகண்டன் நேற்று வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரை நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை தடுத்து நிறுத்தி வெட்ட முயன்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உயிருக்கு பயந்து வண்டியை கீழே போட்டு விட்டு அருகே இருந்த மரக்கடைக்குள் புகுந்துள்ளார்.

    ஆனாலும் அந்த கும்பல் விடாது துரத்தி மரக்கடைக்குள் சென்று மணிகண்டனை ஓட ஓட சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மற்றும் போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர்.

    இக்கொலை தொடர்பாக சிறுமியின் தந்தை நட்டார், உறவினர் கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டி படுகொலை செய்ததாக சிறுமியின் தந்தை நட்டார் (48), தம்பி உட்பட 4 பேரை தாலுகா போலீசார் நேற்று இரவு கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×