என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அருமனை அருகே விபத்து- திருமண கோஷ்டி வேன் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
- மாணவர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
- அருமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருமனை:
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் திபின் பென்சிகர் (வயது 20). இவர் கருங்கல் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் இன்று தனது மோட்டார் சைக்கிளில் சிதறால் பகுதியில் இருந்து மூவாற்றுமுகத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அருமனை அருகே உள்ள தேமானூர் பாலம் பகுதியில் வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த திருமண கோஷ்டி வேன் மோதியது. இதில் மாணவர் திபின் பென்சிகர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்த அவரை, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அருமனையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் மாணவர் திபின் பென்சிகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தையடுத்து சம்பவ இடத்தில் ஏராளான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. வேன் மோதி மாணவர் பலியான தகவல் அறிந்த அருமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த மாணவர் திபின் பென்சிகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் வீடு விபத்து நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் தான் இருக்கிறது. மாணவர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவர் திபின் பென்சிகர் உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
மாணவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண கோஷ்டி வேன் மோதி என்ஜினீயரிங் மாணவர் இறந்தது அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.






