

உடுமலை:
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலாப் பயணிகள் செல்வது தடை விதிக்கப்படுவது நடைமுறை, கடந்த சில நாட்களாக சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்துச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திருமூர்த்தி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. மேலும் பஞ்சலிங்க அருவியின் மேற்பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று சீரான அளவில் தண்ணீர் வந்ததை அடுத்து பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர்.