என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியலின அதிகாரி - வீடியோ வெளியாகி பரபரப்பு
- நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
- முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த முனியப்பன் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 28-ந்தேதி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யா ராஜா என்பவர் தனது பகுதியில் நடந்த பணிகளுக்கான நிதி சம்பந்தமான கோப்பினை கேட்டுள்ளார்.
அப்போது இளநிலை உதவியாளர் முனியப்பன் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரம்யா ராஜா அவரிடம் ஏன்? இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
இதையடுத்து நகராட்சி ஆணையர் இல்லாதபோது அவரது அறைக்கு முனியப்பனை வரவழைத்து, அங்கிருந்த நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் முனியப்பனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.
முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.
மன்னிப்பு கேட்டால் போதுமா? என்று கேட்டதால் முனியப்பன் தானாகவே சென்று ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






