என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிஜிபி-க்கு கடிதம்: அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சிக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
- நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதுகாப்பு வழங்கவில்லை என டிஜிபிக்கு கடிதம்.
- 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்க உத்தரவு.
திருப்புவனத்தில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கியதில் லாக்அப் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதியப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நீதி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிபிஐ-க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சக்தீஸ்வரன் உள்ளார். இவர் சாட்சிகள் அச்சத்தில் உறைந்துள்ளதாக பரபரப்பு பேட்டி அளித்தார். அத்துடன் உயர்நீதிமன்றம் மதுரை கிளை சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்ட நிலையிலும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என டிஜிபி-க்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள்.
சக்தீஸ்வரன்தான் அஜித்குமார் மரண வழக்கல் முக்கிய ஆதாரமான காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்தவர்.






