என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கே.ஆர்.பி. அணையில் இருந்து 2195 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்- 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
- நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
- அணை பகுதியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி நீர்வரத்து 1697 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.15 அடியாக உள்ளதால், நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 2195 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றில் சீறி பாய்ந்து அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக, தரைப்பாலம் வழியாக பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும் கே.ஆர்.பி. அணை போலீசார் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அணை பகுதியை பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் ஆற்றங்கரை யோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.






