என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தவசிமடையில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்
- உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
- சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமேடையில் புனித அந்தோணியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 800 காளைகளை மண்டல இணை இயக்குனர் விஷ்ணுகந்தன், துணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர்கள் சரவணகுமார், ஜெயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர் பிரபாகர் தலைமையிலான குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.
இதே போல் மாடுபிடி வீரர்கள் 350 பேரை வட்டார மருத்துவ அலுவலர் ஜெனி தலைமையிலான மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து காளைகளை அடக்க அனுமதித்தனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் 7.40 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் திருமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் விஜயன், கிழக்கு தாசில்தார் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் ரஞ்சித் குமார், வி.ஏ.ஒ. ரிச்சர்டு ஆகியோர் உடன் இருந்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.
அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் குட்டி புலி, வீரா, வெடிகுண்டு, கருப்பு, அசுரன், வெள்ளப் பறவை உள்ளிட்ட பல்வேறு விதவிதமான பெயர்களில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டத்தில் காளையை அடக்கிய பாலகுரு பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் ஆள் மாறாட்டம் செய்வதை தவிர்க்க மாடுபிடி வீரர்களின் கையில் வண்ண கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் மாட்டின் உரிமையாளர் பாலமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 22) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவ குழுவினர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில், போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், திண்டுக்கல் டவுன் போலீஸ் டி.எஸ்.பி. கார்த்திக், சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் உள்பட 340 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, அண்டா, குடம், சைக்கிள், குத்து விளக்கு, வயர் கட்டில், குக்கர், பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.






