என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசார் தீவிர சோதனை
- கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார்.
- அலுவலக அறைகள், கழிவறைகள், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. கலெக்டர், வருவாய் அலுவலர் உள்பட அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு, அறிமுகம் இல்லாத முகவரியில் இருந்து இன்று காலை ஒரு மெயில் வந்துள்ளது. அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் போலீசார் குழு மோப்பநாய், புல்லட் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு தளங்களிலும் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்தின் 7 தளங்களிலும் உள்ள அலுவலக அறைகள், கழிவறைகள் மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் மின்னஞ்சல் அனுப்பிய முகவரி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்த சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






