என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
- மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
- மோப்பநாய் ரூபியையும் அழைத்துச் சென்று மெட்டல்டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த நிலையில் மீண்டும் இன்று கலெக்டர் அலுவலக மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அந்த மெயிலில் மதியம் ஒரு மணிக்கு குண்டு வெடித்து சிதறும் என கூறப்பட்டுள்ளது. இதனை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மோப்பநாய் ரூபியையும் அழைத்துச் சென்று மெட்டல்டிடெக்டர் உள்ளிட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆனாலும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே 3 முறை கலெக்டர் அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த நிலையில் மீண்டும் தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் மிரட்டல் விடுப்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது கலெக்டர் அலுவலக ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.






