கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதம்

கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் பவுர்ணமியையொட்டி கடல் நீர்மட்டம் இன்று திடீரென தாழ்வாக காணப்பட்டது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது.

கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதும் படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து விவேகானந்த நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடிபோன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும், பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

X

Maalai Malar
www.maalaimalar.com