என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குழந்தைகளைப்போல கதவில் ஏறி, இறங்கி விளையாடிய கரடி
- நிழற்குடைக்குள் நின்றிருந்த கரடி திடீரென சாலையில் வேகமாக ஓடி வந்தது.
- கரடி சர்வசாதாரணமாக சாலையில் ஓடுவதும், நடப்பதுமாக இருந்தது.
குன்னூர்:
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று ராணுவ முகாம் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வந்தது.
ஊருக்குள் வந்த கரடி, அந்த பகுதியில் உள்ள சாலையில் சிறிது நேரம் நடந்து சென்றது. சில சமயங்களில் சாலையில் அங்கும் இங்குமாக ஓடியபடி இருந்த கரடி அங்குள்ள நிழற்குடைக்குள் சென்று நின்று கொண்டது.
அந்த சமயம் அவ்வழியாக வாகனங்கள் சென்றன. ஆனால் கரடி சர்வசாதாரணமாக சாலையில் ஓடுவதும், நடப்பதுமாக இருந்தது. கரடி நின்றதை பார்த்த வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் அந்த சாலையை கடந்து சென்றனர்.
நிழற்குடைக்குள் நின்றிருந்த கரடி திடீரென சாலையில் வேகமாக ஓடி வந்தது. அங்கு ஒரு நுழைவு வாயில் அருகே வந்ததும் நின்று விட்டது. அந்த நுழைவு வாயில் திறந்த நிலையில் கிடந்தது.
அதன் அருகே வந்த கரடி, நுழைவாயில் கதவின் மீது ஏறி, இறங்கி விளையாடி கொண்டிருந்தது.
சிறிது நேரம் கரடி இதுபோன்று செய்து கொண்டிருந்தது. பின்னர் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து, அங்கிருந்து நகர்ந்து சென்றது.
குழந்தைகள் போல கரடி கேட்டின் மீது ஏறி, இறங்கி விளையாடியதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்து தங்களது செல்போனிலும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






