என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஃபரூக் அப்துல்லா மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
- கடந்த 20 ஆண்டுகளாக ஃபரூக் அப்துல்லாவைக் கொல்லத் திட்டம்
- வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், நேஷனல் கான்ஃபரன்ஸ் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, மர்ம நபர் ஒருவர் அவர்மீது துப்பாக்கச்சூடு நடத்தினார்.
ஆனால் அவரது பாதுகாவலர்கள் உடனடியாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர். இந்தத் தாக்குதலில் ஃபரூக் அப்துல்லா காயமின்றி நூலிழையில் உயிர் தப்பினார். தாக்குதல் நடத்திய நபர் ஜம்முவைச் சேர்ந்த கமல் சிங் ஜம்வால் (70) என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த 20 ஆண்டுகளாக ஃபரூக் அப்துல்லாவைக் கொல்லத் திட்டமிட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஃபரூக் அப்துல்லா மீதான இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,
'ஃபரூக் அப்துல்லா மீதான படுகொலை முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற வன்முறைச் செயல்கள் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன். அவருக்கும் உமர் அப்துல்லாவிற்கும் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.






