மாநாட்டுக்கு வரும் ரசிகர்களை பவுன்சர்கள் மூலம் தூக்கி வீசுவதுதான் அரசியல் நாகரீகமா?- அர்ஜூன் சம்பத்

சுற்றுலா தலம் மட்டுமின்றி கொடைக்கானல் ஆன்மீக நகராகவும் விளங்கி வருகிறது. சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட வணிக வரியை அதிகப்படுத்தியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மாநாட்டுக்கு வரும் ரசிகர்களை பவுன்சர்கள் மூலம் தூக்கி வீசுவதுதான் அரசியல் நாகரீகமா?- அர்ஜூன் சம்பத்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை வழிபட்டு அங்கு நடந்த சதுர்த்தி விழாவில் அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுற்றுலா தலம் மட்டுமின்றி கொடைக்கானல் ஆன்மீக நகராகவும் விளங்கி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இது போன்ற நகரில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தி பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

எனவே இங்குள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மேல்முறையீடு செய்ய வேண்டும். நட்சத்திர ஏரியில் ரூ.33 கோடியில் நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அது முறையாக நடக்காததால் நடை பயிற்சி செல்பவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் சொத்து வரி, கடை வரி உள்ளிட்ட வணிக வரியை அதிகப்படுத்தியுள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொடைக்கானலில் போதை பொருட்களை ஒழிக்க தீவிரம் காட்டி வந்தபோதிலும் கஞ்சா காளான் விற்பனை அவ்வப்போது நடந்து வருகிறது.

கொடைக்கானல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது. தேச விரோதிகளின் புகழிடமாகவும் உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற விநாயகரை வழிபட்டு பிரார்த்தனை செய்தோம். விண்வெளியில் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் அமைத்து இஸ்ரோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது போல அயன் டோம் அமைத்து ராணுவத்தினர் எதிரிகள் வீசிய ஏவுகணைகளை தகர்த்தனர். இந்திய ராணுவம் சர்வதேச அரங்கில் தலைசிறந்த ராணுவமாக மாறியுள்ளது.

தமிழகத்தில் வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தி.மு.க.வை வீழ்த்த ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணையும். த.வெ.க. ஒரு அரசியல் கட்சி இல்லை. அது தி.மு.க.வின் ஏ டீமாக செயல்பட்டு வருகிறது. தற்போது தி.மு.க.வை எதிர்த்து பேசுகிறார்கள். அந்த கட்சியின் கொள்கையைதான் பின்பற்றுகிறார்கள். அவர்கள் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல. ரசிகர்கள் மாநாடு. ஆனால் மாநாட்டில் கலந்து கொண்ட ரசிகர்கள்தான் பாவம். விஜய்யை பார்க்க வந்த ரசிகர்களை பவுன்சர்கள் மூலம் தூக்கி வீசுவதுதான் அரசியல் நாகரீகமா? அவர்களுக்கு ரசிகர்கள் மீது அக்கறையும் இல்லை. கருணையும் இல்லை. எப்படி மாநாடு நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக விஜய்யின் மாநாடு இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com