2025 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதுக்கு பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

இலட்ச ரூபாய் நிதியுடன் சாகித்திய அகாதெமி விருதானது மதிப்புமிக்க விழா ஒன்றில் வழங்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதுக்கு பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்கலாம்
Published on

சாகித்திய அகாதெமி அமைப்பின் செயலாளர் ஸ்ரீனிவாசராவ் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "சாகித்திய அகாதெமி, 1955 ஆம் ஆண்டு முதற்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் அங்கிகரிக்கப்பட்டுள்ள 24 இந்திய மொழிகளுக்கு சாகித்திய அகாதெமி விருது' வழங்கி வருகிறது.

அங்கிகரிக்கப்பட்ட அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளின் இந்திய எழுத்தாளர்கள் எழுதிய மிகச் சிறந்த புத்தகங்களுக்கு அகாதெமியின் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அகாதெமியின் இலட்சனை பதித்த கேடயம், ஒரு இலட்ச ரூபாய் நிதியுடன் கூடிய இந்த விருதானது மதிப்புமிக்க விழா ஒன்றில் வழங்கப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதுக்காக இந்திய எழுத்தாளர்கள், எழுத்தாளர்களின் நலன் விரும்பிகள், பதிப்பாளர் ஆகியோரிடமிருந்து புத்தகங்களைச் சாகித்திய அகாதெமி வருவிக்கிறது. 2019, 2020, 2021 2022 2023 ஆகிய ஆண்டுகளில் முதன்முதலில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் (அதாவது, ஜனவரி 1, 2019 முதல் 31 டிசம்பர் 2023 வரை) 2025 ஆம் ஆண்டுக்கான விருதிற்குப் பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பப் படிவத்துடன் பரிந்துரைக்கப்படும் புத்தகத்தின் ஒரு படியை இணைத்து 28 பிப்ரவரி 2025 க்குள் அகாதெமி அலுவகத்திற்கு அனுப்ப வேண்டும். விருது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, www.sahitya-akademi.gov.in என்ற இணையதளத்தில் உள்ள சாகித்திய அகாதெமி விருதுக்கான விதிகளைப் பாக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com