என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிஸ்டம் சரியில்லை, அரசியல் மாற்றம் வேண்டும்- செல்போன் டவரில் ஏறி அ.தி.மு.க. தொண்டர் போராட்டம்
- தன்னுடைய கோரிக்கை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாக வேண்டும்.
- திருப்பூர் கோவில் வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு கோவில்வழி அருகே 40 அடி உயரத்தில் பி.எஸ்.என்.எல்., டவர் உள்ளது. இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். டவர் மீது ஏறிய நபர் தேசியக்கொடி மற்றும் அ.தி.மு.க., கொடியை டவர் மீது கட்டி சிஸ்டம் சரியில்லை, அரசியல் மாற்றம் வர வேண்டும் என வலியுறு த்தினார்.
இதனைப்பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் நல்லூர் போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு டவரின் உச்சியில் நின்று போராடி கொண்டிருந்தவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபர் மேலே இருந்தவாறு பட்டாசுகளையும் பற்ற வைத்து கீழே வீசினார். தொடர்ந்து அவரிடம் நிதானமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தன்னுடைய கோரிக்கை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாக வேண்டும். அ.தி.மு.க., தலைமைக்கு எனது கோரிக்கைகள் சென்று அவர்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
பின்னர் நிதானமாக பேசிய போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரை தானாகவே கீழே இறங்கச்செய்தனர். கீழே இறங்கி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மூக்கையா (வயது 42) என்பதும் , திருப்பூர் கோவில் வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரை விசாரணைக்காக நல்லூர் போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மூக்கையா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதே போல் தாராபுரம் சாலையில் உள்ள வேறொரு டவரில் மேலே ஏறி இது போன்ற பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






