search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடங்குளம் அருகே திருட்டு வழக்கில் போலீசார் தேடியதால் வாலிபர் தற்கொலை
    X

    கூடங்குளம் அருகே திருட்டு வழக்கில் போலீசார் தேடியதால் வாலிபர் தற்கொலை

    • ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர்.
    • கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீசாருக்கு அங்குள்ள கிளாக்குளம் குளத்துக்கரையில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு யார் அவர்? எந்த ஊரைச் சார்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 4 அல்லது 5 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் கூடங்குளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்த அரவிந்த் (வயது 29) என்பதும், அவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்தது. அரவிந்த் டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

    ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் அரவிந்துக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்துள்ளனர். இதனால் போலீசார் எப்படியாவது தன்னை பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் அரவிந்த் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியே சென்ற அரவிந்த் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    இந்நிலையில்தான் அவர் குளத்துக்கரையில் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே அவர் போலீசாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×