search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்- பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த டிரைவர் உள்பட 4 பேர் கைது
    X

    நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்- பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த டிரைவர் உள்பட 4 பேர் கைது

    • சம்பவத்தன்று பெண்ணை நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு முருகன் அழைத்து சென்றுள்ளார்.
    • பெண் அளித்த புகாரின்பேரில் பாளை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி விசாரணை நடத்தினார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அந்த பெண் நெல்லையில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    அப்போது வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன்(வயது 44) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று காலை அந்த பெண்ணை நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு முருகன் அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த டிரைவரின் நண்பர்களான வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்த மணிகண்டன்(32), பேராட்சி(31), அய்யாசாமி ஆகியோரை அழைத்துள்ளார். பின்னர் 4 பேரும் சேர்ந்து தங்களது ஆசைக்கு இணங்குமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி உள்ளனர். ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவரை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை கட்டாயப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மிகவும் சோர்வடைந்த அந்த பெண் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் காயங்களால் ஏற்பட்ட வலி அதிகரிக்கவே, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக சேர்ந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில் பாளை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி விசாரணை நடத்தினார். அவர் முருகன் உள்பட 4 பேர் மீதும் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    Next Story
    ×