search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்பெண்ணை, செய்யாற்றில் கடும் வெள்ளம்- கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

    • சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டி தீர்த்ததால், தாழ்வானப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

    ஜவ்வாது மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குப்பநத்தம் அணைக்கு நேற்று முன் தினம் நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    அதிகாலை 2 மணியளவில் விநாடிக்கு வந்த 1,500 கனஅடி தண்ணீரும், செய்யாற்றில் வெளியேற்றப்பட்டன. இதனால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக உள்ளது. அணைக்கு 5,930 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து தென் பெண்ணையாற்றில் விநாடிக்கு 5,150 கனஅடியும், கால்வாயில் விநாடிக்கு 200 கனஅடியும் என மொத்தம் விநாடிக்கு 5,350 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

    தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என நீர்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது. அணையில் 52.726 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    அணையில் இருந்து விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 157 ஏரிகள் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பின.

    நேற்று ஒரே நாளில் மேலும் 17 ஏரிகள் நிரம்பியுள்ளன. மொத்தம் 174 ஏரிகள், 100 சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளது.

    Next Story
    ×