search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது

    • வளிமண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டியதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது.
    • ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த மாதம் 25-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை திறந்து விடப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா குடிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம். சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

    கடந்த ஜனவரி மாதம் ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நீர் பெறவில்லை. அதன் பின்னர் கோடை வெயில் காரணமாக ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடக்கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசை கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் கடந்த மே 1-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 3-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது.

    இதற்கிடையே வளிமண்டல மேலடுக்கு சூழற்சி காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டியதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த மாதம் 25-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை திறந்து விடப்பட்டது.

    இப்படி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசை கேட்டுக் கொண்டனர். அதன்படி கடந்த 6-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    மே 3-ந் தேதியில் இருந்து கடந்த 6-ந் தேதி வரை கண்டவேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3.569 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் தற்போது மழை இல்லாத காரணத்தால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்து போனது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 90 கன அடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும் இதில் 3.231 தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 31.44 அடி ஆக பதிவானது. 2.0 92 டி.எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல் சென்னை குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கன அடி தண்ணீர், மதகு வழியாக 70 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    Next Story
    ×