search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜய் முதல்வராக பதவி ஏற்கிறார்: நாளிதழ் வடிவில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
    X

    மதுரையில் தினத்தந்தி நாளிதழ் வடிவில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள பரபரப்பு போஸ்டர்.

    விஜய் முதல்வராக பதவி ஏற்கிறார்: நாளிதழ் வடிவில் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

    • அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய் செய்து வருகிறார்.
    • தமிழகத்திற்கு நல்லகாலம் பிறந்துவிட்டது என்று பொதுமக்கள் பேட்டி போன்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

    மதுரை:

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பல்வேறு சமூக சேவை தொடர்பான நடவடிக்கையிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். சமீபத்தில் இலவச சட்ட ஆலோசனை மையத்தையும் தொடங்கியுள்ள அவரது நடவடிக்கைகளை அரசியலுக்கான வருகையாகவே அவரது ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

    தற்போது விஜய் நடித்துள்ள "லியோ" படம் வருகிற 19-ந்தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு புறம் விஜய் அரசியலுக்கு தயாராகி வருவதாக, அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

    அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய் செய்து வருகிறார். தலைவர்களின் சிலைக்கு மாவட்ட நிர்வாகிகள் மூலம் மாலை அணிவிப்பது, தொகுதி வாரியாக ஏழை, எளிய மக்களுக்கு உணவு உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கண் தானம் மற்றும் ரத்த தான முகாம்களை நடத்துவது, உலக பட்டினி தினத்தில் தொகுதி வாரியாக மக்களுக்கு உணவு வழங்குவது என தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் அரசியலுக்கு அடித்தளம் போட்டு வருகிறார் விஜய்.

    இந்த பரபரப்பை அதிகப்படுத்தும் விதமாக மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்களும் கூடுதல் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எப்போதுமே அரசியல் களமாக இருந்தாலும், ஆன்மீக விழாவாக இருந்தாலும் சரி மதுரையில் ஒட்டப்படும் போஸ்டர்களில் இடம் பெறும் வாசகங்கள் பெருமளவில் பேசப்படுவது வழக்கமான நிகழ்வாகி விட்டது.

    அந்த வகையில்தான் தினத்தந்தி செய்தித்தாள் வடிவில் மதுரை தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் விஜய் தலைமையில் டி.டி.வி.தினகரன், அன்புமணி ராமதாஸ், ஓ.பி.எஸ்., அண்ணாமலை, ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செய்தி புகைப்படமாக அச்சிடப்பட்டுள்ளது.

    அதே போல் பிரதமர் மோடி தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும், பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்து போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது என்று பொதுமக்கள் பேட்டி போன்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ் டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×