search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் மூலம் ரூ.2¼ கோடி வருமானம் ஈட்டிய வியாபாரிகள்
    X

    உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் மூலம் ரூ.2¼ கோடி வருமானம் ஈட்டிய வியாபாரிகள்

    • சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்புகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ரெயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரை கோட்டத்தில் 27 ரெயில் நிலையங்களில் உள்ளூர் பிரபல உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 33 சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் தலா 15 நாட்கள் தொடர்ந்து சுங்குடி சேலைகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். அதன் மூலம் வருமான அளவாக ரூ.81 லட்சத்து 91 ஆயிரத்து 847 ஈட்டியுள்ளனர்.

    இதேபோல திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் பத்தமடை பாய் விற்பனையில் ரூ.28 லட்சத்து 23 ஆயிரத்து 71-ம், தூத்துக்குடியில் மக்ரூன் விற்பனையில் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 270, திருச்செந்தூரில் பனை பொருட்கள் விற்பனையில் ரூ.23 லட்சத்து 35 ஆயிரத்து 405, கோவில்பட்டியில் கடலை மிட்டாய் விற்பனையில் ரூ.15 லட்சத்து 43 ஆயிரத்து 975,

    திண்டுக்கல்லில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலை விற்பனையில் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 297, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனையில் ரூ.5 லட்சத்து 97 ஆயிரத்து 655, தென்காசியில் மூங்கில் மர வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 210, ராமநாதபுரத்தில் கருவாடு விற்பனையில் ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 650,

    ராமேசுவரத்தில் கடல் பாசி பொருட்கள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 201, மணப்பாறையில் முறுக்கு விற்பனையில் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 10, மண்டபத்தில் வெட்டிவேர் பொருட்கள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 575, காரைக்குடியில் செட்டிநாடு நொறுக்குத் தீனிகள் விற்பனையில் ரூ.3 லட்சத்து 429, சாத்தூரில் சேவு விற்பனையில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 640 என உள்ளூர் சிறு குறு உற்பத்தியாளர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர்.

    இதன் மூலம் மொத்தத்தில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 7 ஆயிரத்து 235 வருமானம் பெற்றுள்ள உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் கொட்டாரக்கரா மற்றும் புனலூரில் தேங்காய் எண்ணெய், மசாலா பொருட்கள், விருதுநகரில் சேவு, அம்பாசமுத்திரத்தில் குழந்தைகளுக்கான மரப் பாச்சி எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், பழனியில் பஞ்சாமிர்தம், சிவகங்கையில் செட்டிநாடு நொறுக்கு தீனிகள்,

    கொடைக்கானல் ரோட்டில் கொடைக்கானல் மலை சார்ந்த உற்பத்தி பொருட்கள், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், பரமக்குடியில் விவசாய விளைபொருட்கள், வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், சிவகாசியில் பேப்பர் சார்ந்த தயாரிப்புகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    ரெயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய விரும்புபவர்கள் கைவினை பொருட்கள் வளர்ச்சி ஆணையர் அல்லது கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்பது அல்லது பழங்குடி கூட்டுறவு விற்பனை வளர்ச்சி கூட்டமைப்பு, தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், காதி கிராம தொழில் ஆணையம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்த கைவினைஞர்கள், நெசவாளர்கள் அல்லது சுய உதவி குழுக்கள் அல்லது சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக இருக்க வேண்டும்.

    உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வெளிப்படை தன்மையுள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்காக விருப்பமுள்ள தகுதி வாய்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரிடம் இருந்து விருப்ப விண்ணப்பம் பெறப்படுகிறது.

    இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவானது, குலுக்கள் முறையில் விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் ரெயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.

    இது உள்ளூர் சிறு, குறு உற்பத்தியாளர்களின் வாழ் வாதாரத்தை உயர்த்தும் வகையில் ரெயில் நிலையங்களில் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் பெற வாய்ப்பாக அமைகிறது. உற்பத்தியாளர்கள் விண்ணப்பத்துடன் ரூ.1,000 பதிவு கட்டணம் மட்டும் ரெயில்வே துறைக்கு செலுத்தினால் போதுமானது.

    சிறிய ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்பாட்டிற்கேற்ப பதிவு கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பயணிகள் ஆர்வமுடன் வாங்குவதாகவும், அதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதாகவும் உள்ளூர் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×