search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை காரணமாக மெயின் அருவில் செல்லும் பாதையை மாவட்ட நிர்வாகத்தினர் பூட்டுபோட்டு அடைத்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் இருந்து வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக கர்நாடாகவில் உள்ள கபினி அணைக்கு 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று சரிந்து 21,107 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடிக்கு இருப்பதால் கபினி அணையின் முழு கொள்ளளவான 84 அடியின் நீர்மட்டம் இன்று 82.27 அடியாக எட்டியுள்ளது. இதன்காரணமாக கபினி அணையில் இருந்து உபரி நீரை 20 ஆயிரம் கனஅடி அளவில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கே.ஆர்.எஸ். அணையில் இன்று காலை நிலவரப்படி 33,600 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கே.ஆர்.எஸ். அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 110.82 அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,362 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்து மொத்தம் 21,362 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 26-ந் தேதி மாலை இருமாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடைந்தது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஒகேனக்கல்லில் நேற்று காலை 16,500 கன அடியாகவும், மாலையில் 18,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக உயர்ந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் அங்குள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் ஆகிய அருவிகளில் செம்மண் நிறத்தில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு கடந்த 26-ந் தேதி நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்ததால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று 3-வது நாளாகவும் பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதாலும், இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை காரணமாக மெயின் அருவில் செல்லும் பாதையை மாவட்ட நிர்வாகத்தினர் பூட்டுபோட்டு அடைத்தனர். இதனால் மெயின்அருவிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதேபோன்று காவிரி ஆற்றிலும் யாரும் இறங்கி விட கூடாது என்பதற்காக தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளான முதலைபண்ணை, ஊட்டமலை, ராணிப்பேட்டை, நாடார்கொட்டாய், கூத்தப்பாடி ஆகிய பகுதிகளிலும், காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளிலும் வாகனத்தில் ஒலிப்பெருக்கியை கட்டி சென்று பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    Next Story
    ×