search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வானில் நாளை நீல நிற முழு நிலவை பார்க்கலாம்- 3 ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு
    X

    வானில் நாளை நீல நிற முழு நிலவை பார்க்கலாம்- 3 ஆண்டுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு

    • வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும்.
    • நிலவு மிகப் பெரிய அளவிலும் மற்றும் மிகப் பிரகாசமான ஒளியுடனும் தோன்றும்.

    சென்னை:

    ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் புளூ மூன் எனப்படும் நிகழ்வு நாளை(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

    வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை பவுர்ணமி வரும். அப்படியாக ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, 2-வதாக தோன்றும் முழு நிலவை ப்ளூ மூன் (நீல நிலவு) என குறிப்பிடுகிறார்கள்.

    நிலவு பூமியை சுற்றி வர ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால் 29.531 நாட்கள் ஆகும். அதாவது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடங்கள், 38 வினாடிகள் ஆகிறது. பூமி சூரியனைச் சுற்றுவதில் எடுத்துக் கொள்ளும் நேரத்தின் கூடுதலை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டில் ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொள்வது போல மாதந்தோறும் நிலவு பூமியைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கூடுதல் நேரத்தைக் கொண்டு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவு நிகழ்வு தோன்றுகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு 31 நாட்களுக்குள் 2 ப்ளூ மூன்கள் தென்பட்டன. பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி இதே போல் புளூ மூன் தென்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த புளூ மூன் நிகழ்வை நாளை (புதன்கிழமை) பவுர்ணமியில் நாம் பார்க்கலாம்.

    இந்த மாதம் முதல் பவுர்ணமி கடந்த 1-ந் தேதி வந்தது. ஒரே மாதத்தில் 2-வது பவுர்ணமி நாளை வருகிறது. இந்த வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும்.

    அப்போது நிலவின் அளவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாக இருக்கும். இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இத்தகைய அபூர்வ வானியல் நிகழ்வைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தலா 2 முறை பவுர்ணமி நாட்கள் வந்ததிருப்பதால் 2 முறை இந்த அரிய நிகழ்வைக் காண முடிகிறது.

    சந்திரன் 29.53 நாட்களில் பூமியை ஒரு முறை முழுமையாகச் சுற்றிவருகிறது. ஒரு வருடத்தின் 365 நாட்களில் சந்திரன் பூமியை 12.27 முறை சுற்றுகிறது. பூமியில் ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒரு பவுர்ணமி இருக்கும். இப்படி ஒவ்வொரு ஆண்டிலும் நிலவு பூமியை 12 முறை முழுமையாகச் சுற்றிவந்த பின்பும் அந்த ஆண்டில் இன்னும் 11 நாட்கள் இருக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த கூடுதல் நாட்கள் சேர்ந்து, அதன் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 22, மூன்று ஆண்டுகளில் 33 என அதிகரிக்கும். இதனால், ஒவ்வொரு 2 அல்லது 3 வருடங்களுக்கும் புளூ மூன் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. இப்படித்தான் சில மாதங்களில் 2 முறை பவுர்ணமி வருகிறது.

    அதன்படி நாளை (புதன்கிழமை) தோன்றும் பவுர்ணமி நிலவு நீல நிலவாகக் காட்சி அளிக்கும். அப்போது நிலவு மிகப் பெரிய அளவிலும் மற்றும் மிகப் பிரகாசமான ஒளியுடனும் தோன்றும்.

    நீல நிலவு என்று அழைக்கப்படுவதால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஆனால் சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாகத் தோன்றலாம். ஆனால், புளூ மூன் எல்லாமே நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

    சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரன் நீல நிறத்தில் தோன்றலாம். இதுபோன்ற சூழல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் இருந்து பார்க்கும்போது நிலவு நீல நிறத்தில் தெரியக்கூடும்.

    சூரியன் மறைந்த உடனேயே புளூ மூனைப் பார்ப்பது நல்லது. அந்த நேரத்தில் அது மிகவும் அழகாக இருக்கும். இந்த முறை புளூ மூன் தோன்றும்போது, நாளை இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த காட்சி இதற்குப் பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் தான் தோன்றும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×