search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை இந்தியாவின் முதல் செயற்கை கோள் ஆர்யபட்டா ஏவப்பட்ட தினம்- கனவை சரித்திரமாக மாற்றிய நாள்

    • இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஆர்யப்பட்டா, காஸ்மோஸ்-3எம் என்ற ராக்கெட்டால் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • இந்திய அரசு அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஆர்யபட்டாவின் படங்கள் இடம்பெற செய்து கவுரவப்படுத்தியது.

    இந்திய அறிவியல் வரலாற்றில் 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்று இந்தியாவின் கனவை ஒரு விண்ணோட சுமந்து சென்று வெற்றிக்கரமாக அந்த கனவை சரித்திரமாக மாற்றிய வரலாற்று சிறப்புமிக்க நாள்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 50 அறிவியல் விஞ்ஞானிகள் ஒன்று கூடி ரஷ்யாவின் சோவியத் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து ஒரு ராக்கெட்டை ஏவினர். அந்த விண்ணோடம் ஏப்ரல் 19, 1975-ம் ஆண்டில் கொண்டு சென்ற செயற்கை கோள் தான் ஆர்யப்பட்டா.

    இந்தியாவின் முதல் கணிதவியலாளர் மற்றும் வானியலாளராக அறியப்படுகின்ற ஆர்யப்பட்டாவின் பெயரை இந்த செயற்கைகோளுக்கு வைக்கப்பட்டது.

    5-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்யப்பட்டா சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்தின் நிகழ்வுகளை சரியாக கணித்து கூறி, இந்தியாவின் விஞ்ஞான சரித்திரத்தில் இடம்பிடித்தார்.

    அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியிடம் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆர்யப்பட்டா பெயருடன் மைத்ரி, ஜவஹர் போன்ற பெயர்களையும் செயற்கை கோளிற்காக பரிந்துரை செய்தனர். இறுதியில் இந்திராகாந்தி தேர்வு செய்த பெயரே ஆர்யப்பட்டா.

    முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஆர்யப்பட்டா, காஸ்மோஸ்-3எம் என்ற ராக்கெட்டால் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது. 360 கிலோ கிராம் எடை கொண்ட இது 26 முனைகளுடன், 1.4 விட்டம் அளவில் தயாரிக்கப்பட்டது.

    இந்த செயற்கைக்கோளை உருவாக்க சுமார் ரூ.5 கோடி செலவிடப்பட்டது. 26 மாதங்கள் விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து செயற்கை கோளை உருவாக்கினர். இந்த செயற்கைக் கோள் பூமியிலிருந்து சுமார் 695 கி.மீ. உயரத்தில் அமையுமாறு ஏவப்பட்டது. இது உலகை ஒருமுறை சுற்றிவர 96.6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ஒரு நாளைக்கு 15 சுற்றுக்கள் வீதம் உலகைச் சுற்றி வந்தது. இதன் சராசரி வேகம் விநாடிக்கு 8 கி.மீ. ஆகும்.

    ஆர்யப்பட்டாவின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை தவிர அனைத்து பேனல்களுமே சூர்ய மின்கலங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதனால் ஆர்யப்பட்டாவால் 46வால்ட் மின்சாரத்தை உற்பத்திசெய்துக் கொள்ள முடியும்.

    பூமியின் அயணி மண்டலத்தில் இருக்கக்கூடிய நிலைகளை ஆராயவும், நியூட்ரான்கள், சூரியனிலிருந்து வெளிப்படும் காமா கதிர்கள் ஆகியவற்றை அளவீடு செய்வதும் ஆர்யப்பட்டாவின் பணியாக இருந்தது. மேலும் இது வானியல் எக்ஸ்ரேக்களின் செயல்திறனை கண்டறிவதும் இதனுடைய முக்கிய பணியாக இருந்தது. சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின் முதல் 4 நாட்கள் ஆர்யப்பட்டாவின் பணி சிறப்பாகவே இருந்தது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட மின்சார விநியோகக் கோளாறால், 5-வது நாளில் செயல்பாடுகள் அனைத்தும் தோல்வியடைந்து, ஆர்யப்பட்டாவிலிருந்த அனைத்து கருவிகளும் செயலற்று போயின.

    மின்சார விநியோகம் தடைபடும் வரை பெங்களூரிலுள்ள இஸ்ரோவின் தலைமை அலுவலகத்திற்கு ஆர்யப்பட்டா சில தகவல்களை அனுப்பிவைத்தது.

    செயலிழந்து நின்றாலும், ஆர்யப்பட்டா பூமியின் சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட 1992-ம் ஆண்டு வரை சுற்றி வந்தது. 17 ஆண்டுகள் கழித்து 1992-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி ஆர்யப்பட்டா பூமியின் மேற்பரப்பில் வெடித்து சிதறியது. ஆர்யபட்டா செயற்கை கோளின் வெடித்த துகள்கள், பாகங்கள் அனைத்தும் மீண்டும் வளிமண்டலத்திற்குள் பிரேவசித்து, இந்தியாவின் கனவு அன்றே மறைந்தது.

    இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அச்சாரம் அமைத்து கொடுத்த ஆர்யப்பட்டா செயற்கைகோளை நினைவுகூறும் விதமாக, இந்திய அரசு அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஆர்யபட்டாவின் படங்கள் இடம்பெற செய்து கவுரவப்படுத்தியது.

    இந்த சரித்திர தினத்தை நாளை நினைவு கூறும் நாளாகும்.

    Next Story
    ×