search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்
    X

    திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

    திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

    • அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும்.
    • நாளை அதிகாலை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்கிறார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மாலையில் பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் கொடி மரத்துக்கு முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் தங்க விமானங்களில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக எழுந்தருளினர்.

    சரியாக மாலை 6 மணிக்கு கோவில் கொடிமரம் முன், இறைவிக்கு இறைவன் தன் உடலின் சரிபாதியை கொடுத்ததை விளக்கும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் வலம் வந்து ஒரு நிமிடம் தரிசனம் தந்தார்.

    அப்போது சிவாச்சாரியார்கள் பஞ்சமுக தீபாராதனை காட்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷமிட சங்கு, தாளம், பெருந்தாள், பேரிகைகள் முழங்க சிவதொண்டர்கள் ஆனந்த நடனமாட, மலையை நோக்கி தீப்பந்தங்கள் காட்ட, அதிர்வேட்டுகள் முழங்க 2 ஆயிரத்து 668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மீது தீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 16-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை வியாழக்கிழமை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    நாளை அதிகாலை ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்கிறார்.

    Next Story
    ×