search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர்களை கூண்டோடு மாற்ற முடிவு- புதிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்
    X

    விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர்களை கூண்டோடு மாற்ற முடிவு- புதிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்

    • 2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டசபை தேர்தலை மையமாக வைத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை மாவட்டத்திற்கு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் தற்போது உள்ள 7 மாவட்டங்கள் 8 ஆக உயர்கிறது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட நிர்வாகிகளை மாற்றி சீரமைக்க கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முடிவு செய்தார்.

    7 ஆண்டுகளாக மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் மாவட்டங்கள் அதிகரிக்கப்படுகிறது.

    கட்சி ரீதியாக 100 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், பொருளாளர், ஊடக அமைப்பாளர் உள்ளிட்ட 10 பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

    தமிழகம் முழுவதும் இருந்து 4000 விண்ணப்பங்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த மனுக்களை உயர்மட்ட நிர்வாகிகள் பரிசீலனை செய்து தலைவர் திருமாவளவனிடம் கொடுத்துள்ளனர். சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

    இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    கட்சியில் மாவட்ட அளவில் புதிய பொறுப்புகளுக்கு வருவதற்கு இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தலித் அல்லாத பிற ஜாதியினருக்கு 10 சதவீதமும், மகளிருக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.

    2024 பாராளுமன்ற தேர்தல், 2026 சட்டசபை தேர்தலை மையமாக வைத்து புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கட்சி பணிகளை முறையாக செய்யாதவர்கள், கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுபவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர்கள் பதவிக்காலம் 4 வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா தொற்று பாதிப்பால் 2 ஆண்டுகள் கூடுதல் வாய்ப்பு வழங்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னை மாவட்டத்திற்கு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு இருப்பதால் தற்போது உள்ள 7 மாவட்டங்கள் 8 ஆக உயர்கிறது. கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புகள் மாற்றப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிக்கிறார்.

    Next Story
    ×