search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குவைத்தில் சித்ரவதை செய்யப்பட்ட வடசென்னை பெண் மீட்கப்பட்டார்
    X

    புவனா

    குவைத்தில் சித்ரவதை செய்யப்பட்ட வடசென்னை பெண் மீட்கப்பட்டார்

    • தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வேலை செய்ய வேண்டும்.
    • தொடர்ந்து நள்ளிரவு 1 மணிவரை ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் புவனா. இவரது கணவர் ஜேம்ஸ்பால். கூலித் தொழிலாளி. இவர்களுக்கு விசினா (16), விதியா (14) என்ற இரண்டு மகள்கள்.

    குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாமல் தவித்த புவனா வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சூளைமேட்டை சேர்ந்த ஏஜெண்டை சந்தித்துள்ளார்.

    அந்த நபர் குவைத்தில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று கூறி இருக்கிறார். மாதம் 150 குவைத்தினார் (இந்திய மதிப்பில் ரூ.39,528) சம்பளம் பேசி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் அனுப்பி இருக்கிறார்கள். அங்கு ஒரு போலீஸ் அதிகாரியின் வீட்டு வேலைக்காக நியமித்துள்ளார்கள்.

    அங்கு புவனாவை வேலை வாங்கினார்கள் என்பதைவிட சித்ரவதை செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வேலை செய்ய வேண்டும். தொடர்ந்து நள்ளிரவு 1 மணிவரை ஓய்வே இல்லாமல் வேலை செய்ய வேண்டும்.

    கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் அடி விழும். அதையும் தாங்கி வேலை செய்த புவனாவுக்கு சம்பளமும் பேசியபடி கொடுக்கவில்லை. மாதம் ரூ.26,750 மட்டுமே கொடுத்துள்ளார்கள்.

    அவரை செல்போனிலும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளார்கள். ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்கு புவனாவை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள்.

    புவனா இரவில் ஓய்வெடுப்பது 2 அல்லது 3 மணிநேரம் தான். அதற்காக அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் கழிவறை. அந்த அறையை படுக்கையறையாக மாற்றிக்கொள்ளும்படி கூறி இருக்கிறார்கள்.

    அந்த அறையிலேயே தங்கிய புவனா தனது நிலமையை வீடியோவாக பதிவு செய்து சென்னையில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பினார். அதை வைத்து தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புவனாவை மீட்டுத்தரும் படி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து மத்திய அரசின் உதவியுடன் புவனாவை மீட்க முயற்சி எடுத்தனர். இதற்கிடையில் புவனா மீட்கப்பட்டு அங்குள்ள தமிழ் சங்கத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    அவர் இன்று அல்லது நாளைக்குள் சென்னை திரும்புவார் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

    Next Story
    ×