என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் வலது, இடது கரை வாய்க்காலில் குடிநீர் தேவைக்காவது தண்ணீர் வருமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு
- விவசாயத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்.
- விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அம்மாபேட்டை:
மேட்டூர் அணை கட்டி முடிக்கும் முன்பாகவே வலது மற்றும் இடது கரை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. விவசாயத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும்.
மேலும் முன்னதாகவே மேட்டூர் அணை முழு கொள்ளளவு எட்டும் போது உபரி நீர் இந்த வாய்க்கால்களில் திறந்து விடப்படும்.
அப்படி திறக்கப்படும் தண்ணீரை வைத்து சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய பகுதிகளில் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது. அதன் மூலம் விவசாயத்தை மூலதனமாக நம்பி இருக்கும் கூலி தொழிலாளர்களும் பயன்பட்டு பலனடைந்து வருகின்றனர்.
இந்த வருடம் மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வலது கரை வாய்க்காலை நம்பியே எங்கள் விவசாயமும், பொதுமக்களின் குடிநீர் தேவையும் உள்ளது. இந்த வருடம் ஆரம்பம் முதலில் மழை வெகுவாக குறைந்து போய் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக வலது கரை வாய்க்கால் வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே 10 நாட்களுக்கு ஒரு முறையாவது முறை வைத்து வலது கரை மற்றும் இடது கரை வாய்க்காலில் தண்ணீர் விடப்பட்டால் பூமி குளிர்ந்து மழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மக்களின் நலன் கருதி அரசு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






