என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குடிநீர் நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர்- சாலையில் தேங்குவதால் சுகாதாரகேடு
- திருக்கச்சூர் பகுதி தியாகராஜர் கோவில் எதிரே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளது.
- பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வண்டலூர்:
சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதி தியாகராஜர் கோவில் எதிரே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளது.
இந்த குடிநீர் நிலையத்தில் இருந்து வெளியேறும், கழிவு உபரி நீர் செல்வதற்கு கால்வாய் இல்லாததால் சாலையில் விடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு பல ஆயிரக்கணக்கான லிட்டர் வீணாக தண்ணீர் சாலையிலேயே விட்டு விடுகின்றனர்.
மேலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால், மழை நீரும் கழிவு நீரும் கலந்து கோவில் எதிரே குட்டை போல் சாலையில் தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குட்டை போல தேங்கி நிற்கும் நீரால் சுகாதாரகேடு ஏற்படும் அவல நிலை உள்ளது.
இது குறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் அமைத்து தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






