search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    18-வது சுனாமி நினைவு தினம்: சென்னை கடலில் பால் ஊற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி
    X

    18-வது சுனாமி நினைவு தினம்: சென்னை கடலில் பால் ஊற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி

    • சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
    • பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மீனவர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலை புரட்டிப்போட்டது.

    இந்தியா உள்பட 14 நாடுகளில் கடலோர பகுதிகளில் வசித்த மக்களையும் கடற்கரைகளுக்கு வேடிக்கை பார்க்க சென்றவர்களையும் திடீரென வந்த ஆழிப்பேரலை வாரிசுருட்டி இழுத்துச்சென்றது. இதில் 14 நாடுகளிலும் சேர்த்து 2½ லட்சம் பேர் பலியானார்கள்.

    தமிழகத்தில் சென்னை முதல் குமரி வரை கடலோர பகுதிகளை துவம்சம் செய்த சுனாமிக்கு 10 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி சுனாமியால் உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்கள் இன்னமும் சோகத்தில் இருந்து மீளாமலேயே உள்ளனர்.

    சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 18-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    தமிழக கடலோர பகுதிகள் முழுவதிலும் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னையிலும் கடற்கரை ஓரங்களில் சுனாமி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பட்டினப்பாக்கம், காசிமேடு உள்ளிட்ட அனைத்து கடலோர பகுதிகளிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பால் ஊற்றப்பட்டது.

    சுனாமியால் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மீனவர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

    இதனால் கடலோர பகுதிகள் இன்று கண்ணீர் கடலாக காட்சி அளித்தது. உதிரி பூக்களை வாங்கி வந்து பலர் கடலில் தூவி மரியாதை செலுத்தினார்கள். மெரினா பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஊர்வலமாக சென்று மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தி.மு.க. சார்பில் கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மீனவ மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் தாய் இளைய அருணா, ஜே.ஜே.எபினேசர் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் லட்சுமணன், சுற்றுச்சூழல் அணி தீனயாளன், மாவட்ட தலைவர் வெற்றி வீரன், ஆர்.வி.கணேஷ் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    வடசென்னை பகுதியான காசிமேடு கடற்கரையில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதே போன்று மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் சார்பிலும் கடலோர பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு குமரி மாவட்டத்தில் நினைவு தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    Next Story
    ×