என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருநின்றவூரில் தண்டவாளத்தில் விரிசல்- எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தம்
- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
- மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
திருநின்றவூர்:
போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. காலை 7 மணியளவில் திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது முன்னதாக முன்னாள் சென்ற மற்றொரு ரெயிலின் என்ஜின் டிரைவர் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.
இதில் திருநின்றவூர் ரெயில்வே பாலம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவ்வழியே வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.மேலும் சரக்கு ரெயில் ஒன்றும் நிறுத்தப்பட்டது.
கூடுதல் ரெயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை உடனடியாக சரிசெய்தனர். பின்னர் காலை 8.30 மணிக்கு மேல் எக்ஸ்பிரஸ்ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் எக்ஸ்பிரஸ்ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. திருவள்ளூர்-சென்ட்ரல் மார்க்கத்தில் வழக்கம்போல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது.






