search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.38,731 கோடி நிதி கிடைக்கும்- தமிழக திட்டங்களுக்கு நிதி கிடைக்கவில்லை
    X

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.38,731 கோடி நிதி கிடைக்கும்- தமிழக திட்டங்களுக்கு நிதி கிடைக்கவில்லை

    • 2022-23-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய வரிகளின் பங்காக தமிழகம் பெற வேண்டிய தொகை ரூ.38,731.24 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • 2023-24-ம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் தமிழகம் சார்ந்த திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற கருத்து பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நிதித்துறை மூத்த அதிகாரி கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு துறை வாரியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் தமிழ்நாட்டுக்கு எந்தவித திட்ட அறிவிப்பும் குறிப்பிட்டு அதற்கு நிதி எதுவும் ஒதுக்காதது ஏமாற்றம் தான்.

    ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவதை குறைந்தது மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. அதுமட்டுமல்ல மாநிலங்களுக்கு கடன் வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளும் வரையரைக்கப்பட்டு உள்ளது.

    2022-23-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய வரிகளின் பங்காக தமிழகம் பெற வேண்டிய தொகை ரூ.38,731.24 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வருவாய் உயரும். இது 2022-23-ம் ஆண்டுக்கான மாநிலத்தின் பட்ஜெட் ரூ.33,311 கோடியை விட அதிகமாகும்.

    2023-24-ம் ஆண்டிற்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் நிதிப் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 0.5 சதவீதம் மின்துறை சீர்திருத்தங்களுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    2023-24-ம் ஆண்டிற்கான மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு ரூ.41,664.86 கோடியாக இருக்கும் என்று அதில் மதிப்பிடப்பட்டுள்ளது.

    தோல் மற்றும் தோல் அல்லாத பாதணிகள் மற்றும் எலக்ட்ரோ லைசர் உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டம் மற்றும் மரப்பொருட்கள் துறையில் முதலீட்டை ஈர்க்க இறக்குமதி செய்யப்படும் மரத்தின் மீதான வரியை குறைக்கவும் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அது பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    கர்நாடகா மாநிலத்துக்கு 5 ஆயிரம் கோடி அளவுக்கு நிதிஒதுக்கப்பட்டது போன்று தமிழகத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஜி.எஸ்.டி. வரி வருவாய் தான் நமக்கு முக்கியமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×