search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாமியார் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி
    X

    மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாமியார் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி

    • நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.
    • போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமத்தை சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள் (வயது 75), அவரது மகன் சரபோஜி (40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி (38) ஆகிய 3 பேரும் நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தங்களது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    இதனை பார்த்த போலீசார் உடனடியாக ஓடி சென்று அவர்களிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    நாங்கள் எங்கள் ஊரில் 2.50 ஏக்கரில் நெற்பயிர் செய்துள்ளோம். விவசாயத்தை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் எனது இறந்த மகனின் மனைவி அதாவது எனது மருமகள் விளைநிலத்தில் எனக்கும் பங்கு உண்டு எனக்கூறி 30 பேருடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தினார்.

    மேலும் நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.

    இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். நாங்கள் உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட மருமகள் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தில் நெற்பயிர் அறுவடை செய்ய எந்த இடையூறும் ஏற்படாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×