search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதன விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
    X

    சனாதன விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

    • கோவில் ஆன்மிகச் சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • சனாதான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்.

    சென்னை:

    திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள புரட்டாசி மாத வைணவத் கோவில் ஆன்மிகச் சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    புரட்டாசி மாதத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரே நாளில் காலையில் தொடங்கி மாலைக்குள் 6 வைணவ கோவில்களில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனமும் அந்தந்த கோவில்களின் பிரசாதங்களும், மதிய உணவும் வழங்கப்படும்.

    சென்னையில் 2 பயணத் திட்டங்களாகவும், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 4 மண்டலங்களில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆடி மாதத்தில் ஒரே நாளில் 6 அம்மன் கோவில்கள், எட்டு கோவில்கள் என இரண்டு பிரிவாக பிரித்து அம்மனை தரிசிப்பதற்கு இதேபோன்று ஒரு ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 1,000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியை தருகிறது.

    நவராத்திரியை முன்னிட்டு ஒரே இடத்தில் பிரசித்தி பெற்ற 9 அம்மன்களை தரிசனம் செய்யக்கூடிய அளவில் ஒரு நிகழ்ச்சியினை நவ ராத்திரி விழாவாக ஏற்பாடு செய்ய இருக்கின்றோம். அந்த நிகழ்விலே கொலுவும் அமைக்கப்பட இருக்கின்றது.

    இன்றைக்கு திருவல்லிக்கேணியில் தொடங்கப்பட்டுள்ள ஆன்மிகச் சுற்றுலாவில் 62 நபர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம், தல சயன பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு 34 நபர்களும்.

    இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர், வைத்திய வீரராகவ பெருமாள் கோவில், ஸ்ரீ பெரும்புதூர், ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு 28 நபர்களும் அழைத்து செல்லப்படுகின்றனர்.

    சனாதான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×