search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்
    X

    தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்

    • கத்திரி வெயில் முடிந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
    • சென்னை, மதுரை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 சதவீதத்திற்கும் மேல் வெயில் அடித்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக கத்திரி வெயில் என கூறப்படும் அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்து இருந்தது.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் தீ பிளம்பை கக்கியது போல கொளுத்தி எடுத்தது. இதனால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    வீடுகளுக்குள் மின்விசிறி, ஏ.சி. போன்றவை இல்லாமல் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் நீர் ஆதாரங்களான ஜூஸ் வகைகள், மோர், தயிர், இளநீர், தர்பூசணி மற்றும் பழவகைளை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.

    கத்திரி வெயில் முடிந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. சென்னை, மதுரை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 சதவீதத்திற்கும் மேல் வெயில் அடித்து வருகிறது.

    நேற்றும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. நேற்று பல இடங்களில் பதிவான வெயிலின் உச்சபட்ச அளவு (பாரன்ஹட்):-

    சென்னை நுங்கம்பாக்கம்-105.98, சென்னை மீனம்பாக்கம்-105.62, திருத்தணி-104.9, வேலூர்-104.54, மதுரை நகரம்-103.64, மதுரை விமான நிலையம்-103.64, நாமக்கல்-103.64, கடலூர்-103.28, தூத்துக்குடி-103.1, திருச்சி-102.74, தஞ்சாவூர்-102.2, பரமத்திவேலூர்-102.2, நாகை-101.84, திருப்பத்தூர்-101.84, பரங்கிபேட்டை-101.84, புதுச்சேரி-101.12, தருமபுரி-100.4, பாளையங்கோட்டை-100.76, சேலம்-102.22, காரைக்கால்-100.2 என பதிவாகி இருந்தது.

    இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் நேற்று முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் பிப்பர்ஜர் நேற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, கோவாவில் இருந்து மேற்கே சுமார் 800 கி.மீ தொலைவிலும், மும்பையில் இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 820 கி.மீ தொலைவிலும், போர்பந்தரில்(குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே 830 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

    இது மேலும் வலுப்பெற்று அடுத்த 36 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன்பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையிலும் அடுத்த 3 நாட்களில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×