search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலில் இருந்து, நீராவி ஜெனரேட்டர்களை மீட்க தொடரும் போராட்டம்
    X

    கூடங்குளத்தில் தரை தட்டிய மிதவை கப்பலில் இருந்து, நீராவி ஜெனரேட்டர்களை மீட்க தொடரும் போராட்டம்

    • கூடங்குளம் கடலில் மிதவை கப்பல் பாறையில் தரை தட்டியது.
    • தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்க நிபுணர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து அங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5, 6-வது அணு உலைகளுக்கான ரூ.600 கோடி மதிப்பிலான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கொண்டு வரப்பட்டது. அவற்றில் 2 நீராவி ஜெனரேட்டர்களை மிதவை கப்பலில் கூடங்குளத்துக்கு கொண்டு சென்றனர்.

    மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களையும் கடந்த 8-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி கூடங்குளத்துக்கு வந்தபோது, அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் இழுவை கப்பலுக்கும், மிதவை கப்பலுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கூடங்குளம் கடலில் மிதவை கப்பல் பாறையில் தரை தட்டியது.

    தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்க நிபுணர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடல் சீற்றத்தால் மிதவை கப்பல் பாறையில் மோதி சேதமடைந்ததால், நீராவி ஜெனரேட்டர்களுடன் மூழ்கும் நிலை உள்ளது. அந்த ஜெனரோட்டர்களுக்கு ரூ.426 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், காப்பீடு நிறுவனத்தினர் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து அவர்கள் கடலுக்குள் ரூ.2 கோடி மதிப்பில் சாலை அமைத்து, அதன்மூலம் கிரேனை பயன்படுத்தி ஜெனரேட்டர்களை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மிதவை கப்பலில் சேதம் அடைந்த பகுதிகளை வெல்டிங் செய்து சரிசெய்யும் பணியும் மற்றொரு புறம் நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் அந்த மிதவையை இழுவை கப்பலை கொண்ட இழுத்து செல்லலாம் என்ற முயற்சி நடக்கிறது.

    மேலும் தரையில் இருந்தபடியே அதிநவீன கிரேனை நிறுத்தி கடலுக்குள் இருக்கும் ஜெனரேட்டரை மீட்க முடியுமா எனவும் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த பணிகள் 20 நாட்கள் வரை தொடரும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×