search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரத்தில் 2-வது நாளாக கடல் சீற்றம்: 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை
    X

    ராமேசுவரத்தில் 2-வது நாளாக கடல் சீற்றம்: 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை

    • கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.
    • ராமேசுவரம் துறைமுகம், மண்டபம், பாம்பன் இறங்குபிடி தளங்களில் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி நேற்று முதல் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ.வரை காற்று வீசி வருகிறது.

    தனுஷ்கோடி, பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

    இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1500 விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம் துறைமுகம், மண்டபம், பாம்பன் இறங்குபிடி தளங்களில் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    2-வது நாளாக இன்றும் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நேற்று முதல் இந்த பகுதியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. மேலும் சூறாவளியால் புழுதி காற்றும் வீசி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அக்காள்மடம், முகுந்த ராயர் சத்திரம், அரிச்சல் முனை உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது. பல இடங்களில் சாலைகளில் மணல்கள் மூடியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டது.

    பாம்பனில் கடல் சீற்றமாக இருந்தது. அங்குள்ள தூக்கு ரெயில் பாலம் அருகே திடீரென கடல் பல அடி தூரம் உள்வாங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைபர், நாட்டுபடகுகள் கடற்கரை மணலில் தரைதட்டி நின்றன.

    Next Story
    ×