search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 32 கோவில்களில் வடை-பாயாசத்துடன் சமபந்தி விருந்து
    X

    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 32 கோவில்களில் வடை-பாயாசத்துடன் சமபந்தி விருந்து

    • பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார்.
    • வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.

    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் கோவில்களில் சமபந்தி விருந்து வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோவில்களில் அறுசுவை உணவுடன் கூடிய சமபந்தி விருந்து இன்று நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்த சமபந்தி விருந்து நடந்தது. சென்னையில் 32 கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர் நித்யா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தின்போது 200 பேருக்கு வேட்டி- சேலையும் வழங்கப்பட்டது. பொதுமக்களோடு அமர்ந்து சமபந்தி விருந்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உணவருந்தினர்.

    பின்னர் வேட்டி-சேலையை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். வடை-பாயாசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றுடன் சுவையான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் ருசித்து சாப்பிட்டனர்.

    தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார். அடையாறில் உள்ள ஆனந்த பத்மநாபசுவாமி கோவிலில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார்.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் பெரியசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு சமபந்தி விருந்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து உணவருந்தினார்கள்.

    பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார். வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இதில் கோவில் தக்கார் ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அரண்மனைக்கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, வில்லிவாக்கத்தில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் அரசு தலைமை கொறடா செழியன் ஆகியோரும் பங்கேற்று சமபந்தி விருந்தில் உணவருந்தினார்கள்.

    பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் சாதத்துடன் சாம்பார், வத்த குழம்பு, ரசம், உருளை கிழங்கு- பட்டாணி பொறியல், கேரட்- கோஸ் பொறியல், அவியல், சேமியா பாயாசம், மெதுவடை, தயிர் பச்சடி, மோர், ஊறுகாய் ஆகியவற்றுடன் சர்க்கரை பொங்கலும் சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று அனைத்து கோவில்களிலும் 3 வகையான கூட்டு சமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மணக்க, மணக்க சிறப்பு சைவ உணவு சமபந்தி விருந்தில் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×