search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓசூரில் தனியார் கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டை விற்பனை- கணவன், மனைவி தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு
    X

    ஓசூரில் தனியார் கருத்தரிப்பு மையத்தில் கருமுட்டை விற்பனை- கணவன், மனைவி தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு

    • கருமுட்டை விவகாரம் ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பூதாகரமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
    • தற்போது ஓசூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருமுட்டையை விற்றுவிட்டதா கணவன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்தவர் சப்தகிரி. இவரது மனைவி சவிதா. இவர்கள் குழந்தை வேண்டி, ஓசூரில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் குழந்தை கருத்தரிப்புக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

    இதற்காக, அவர்கள் ரூ.3,50,000- வரை செலவு செய்துள்ளனர். கருத்தரிப்புக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் சப்தகரியின் விந்தணு மற்றும் சவிதாவின் கருமுட்டை ஆகியவற்றை பெற்று 13 கரு முட்டைகளை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதில் 3 கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி, அதனை கடந்த மாதம் 22 ஆம் தேதி சவிதாவின் கருப்பைக்குள் செலுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று, கருப்பைக்குள் செலுத்தப்பட்ட கருமுட்டைகள் கருத்தரிக்கவில்லை என டாக்டர்கள், சப்தகிரி தம்பதியிடம் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினர் 3 கருமுட்டைகளில், 2 கருமுட்டைகள் மட்டும்தான் கருப்பைக்குள் வைக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு கருமுட்டையை தற்போது கருப்பைக்குள் வையுங்கள், அதன் மூலம் மீண்டும் கருத்தரிக்கலாம் என கேட்டுள்ளனர்.

    அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் 3 கருமுட்டைகளையும் கருப்பைக்குள் வைத்து கருத்தரிக்க சிகிச்சை அளித்தோம். ஆனால் 3 கருமுட்டைகளும் கருத்தரிக்கவில்லை என கூறியுள்ளனர்.

    அதனை ஏற்க மறுத்த சப்தகிரியின் குடும்பத்தினர், 2 கரு முட்டைகளை மட்டுமே மருத்துவர்கள் கருப்பைக்குள் வைத்துள்ளனர். மீதமிருந்த ஒரு கருமுட்டையை மருத்துவமனை நிர்வாகம் பணத்திற்காக விற்று விட்டதாக ஆவேசமடைந்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓசூர் டவுன் போலீசார் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட சப்தகிரி, சவிதா ஆகியோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருமுட்டை விவகாரம் ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பூதாகரமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஓசூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருமுட்டையை விற்றுவிட்டதா கணவன், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×